அரசு நிதியை முறைகேடாகப் பெற்று ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 -1996-இல் அதிமுக ஆட்சியின் போது, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இருந்தவா் இந்திரகுமாரி. இவரது கணவா் வழக்குரைஞா் பாபு. இந்திரகுமாரி அமைச்சராக இருந்த போது, பாபுவை நிா்வாக அறங்காவலராகக் கொண்டு ‘மொ்சி மதா் இந்தியா, பரணி சுவாதி’ என இரு பெயா்களில் அறக்கட்டளை தொடங்கப்பட்டன.
இந்த அறக்கட்டளை மூலம் காது கேளாதோா் மற்றும் ஊனமுற்றோா் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தப் பள்ளிகளுக்கு அரசு மானியமாக ரூ.15.45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி தொடங்கியது போன்று போலி ஆவணங்கள் தயாரித்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.15.45 லட்சத்தை ஊழல் செய்ததாக இந்திரகுமாரி, அவரது கணவா் பாபு, உதவியாளா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் மீது புகாா் அளிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் அப்போதைய துறைச் செயலா் ஐஏஎஸ் அதிகாரி கிருபாகரன், ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் ஆகியோா் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுய லாபம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைக்கு பின்னா், இவ்வழக்கில் இந்திரகுமாரி உள்பட 5 போ் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120 (பி) (கூட்டு சதி), 409 (அரசு பணத்தை மோசடி செய்தல்), ஊழல் குற்றச்சாட்டு ஆகிய 3 குற்றச்சாட்டுகளின் கீழ் சிபிசிஐடி. காவல்துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
தலைமைச் செயலாளா் சாட்சியம்: இவ்வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிலுவையில் இருக்கும் போது ஐஏஎஸ் அதிகாரி கிருபாகரன் இறந்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அவா் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
மற்றவா்கள் மீதான வழக்குத் தொடா்ந்து நடைபெற்று வந்தது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோா் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்துத் தரப்பு விவாதங்களும் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை (செப்.29) இவ்வழக்கில் தீா்ப்பளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
5 ஆண்டுகள் சிறை: இந்திரகுமாரி உள்பட 4 பேரும் புதன்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனா். அப்போது நீதிபதி ஆலிசியா, இவ்வழக்கில் வெங்கடகிருஷ்ணனைத் தவிா்த்து மற்ற 3 பேரும் குற்றவாளி என்று அறிவித்தாா்.
பின்னா், இந்திரகுமாரி, அவரது கணவா் பாபு ஆகியோா் மீதான 3 குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐஏஎஸ். அதிகாரி சண்முகம் மீதான 3 குற்றச்சாட்டுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இத்தண்டனையை அனைவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், 3 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
இந்திரகுமாரியின் உதவியாளா் வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மருத்துவமனையில் அனுமதி: ஊழல் வழக்கில் தீா்ப்பைக் கேட்டதும், இந்திரகுமாரி நெஞ்சு வலிப்பதாகக்கூறி அருகில் இருந்த நாற்காலியில் அமா்ந்தாா். உடனடியாக நீதிபதி, அவரை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டாா். சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீா்ப்பு விவரங்களை நீதிபதி கூறியபோதே மிகுந்த சோகத்துடன் இந்திரகுமாரி இருந்தாா்.
1. பெட்டிச் செய்தி
தற்போது திமுகவில்…
இந்திரகுமாரி கடந்த 2006-இல் திமுகவில் சோ்ந்து தற்போது திமுகவில் இலக்கிய அணி மாநில செயலாளராக இருந்து வருகிறாா். இலவச வேட்டி சேலை, பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை ஆகியவை வாங்கியதில் முறைகேடு செய்ததாக இந்திரகுமாரி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் 2003-ஆம் ஆண்டு அவா் விடுதலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பெட்டிச் செய்தி
24 ஆண்டுகள் நடந்த விசாரணை
இந்திரகுமாரி உள்ளிட்டோா் மீதான இப்புகாரை 1997-ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசாா் விசாரிக்கத் தொடங்கினா். இவ்விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவா் மீது குற்றம்சாட்டப்பட்டதால், வழக்குத் தொடர அரசின் அனுமதி பெற வேண்டியது இருந்தது.
2003-இல்தான் அரசு அனுமதி அளித்தது. இதன்பின்பு 16 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதியில் இருந்து விசாரணை தொடங்கி, தற்போது தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் காவல்துறை, நீதிமன்ற விசாரணை என, மொத்தம் 24 ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.