எனக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் கடைசி பாடலாக அண்ணாத்த இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்த பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்காக இதற்கு முன்பு அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவை.
இந்நிலையில் இன்று வெளியான அண்ணாத்த பாடல் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ´´45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்´´ என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.