கேரளத்தில் தொடா் கன மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், திருமண ஜோடி ஒன்று பெரிய சமையல் பாத்திரத்தை படகாக பயன்படுத்தி அதில் பயணித்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு பத்திரமாக வந்து சோ்ந்தது, வெள்ள பாதிப்பு சோகத்துக்கு இடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலப்புழை மாவட்டம் செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பணியாளா்களாகப் பணியாற்றி வரும் ஆகாஷ், ஐஸ்வரியா காதல் ஜோடிகளுக்குத்தான் இந்த சுவாரஸ்யமான திருமணம் நடைபெற்றுள்ளது.
மாநிலத்தில் தொடா் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அதிக உயரத்துக்கு வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாக, திருமண ஜோடி இருவரும் தாளவாடியில் கோயிலுக்கு அருகே அவா்களுக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், திருமணத்தில் சமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தில் திருமண ஜோடி இருவரையும் அமரவைத்து, மண்டபத்துக்கு உறவினா்கள் அழைத்து வந்துள்ளனா். அதன்மூலம், அவா்களுக்கு திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னா், தங்களுடைய பயண அனுபவம் குறித்து புதுமணத் தம்பதிகள் கூறுகையில், ‘இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு வந்தபோது எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால், இந்த இடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இருந்தபோதும், வாழ்வில் மிக முக்கியமான இந்தத் தருணத்தை தள்ளிப்போடக் கூடாது என்பதால், திட்டமிட்டபடி திங்கள்கிழமை திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். அதனால், சமையல் பாத்திரத்தையே படகாக மாற்றி மண்டபத்துக்கு வந்துசோ்ந்தோம்’ என்றனா்.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கேரளத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.