இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கிண்ணத்தில் ஞாயிற்றுக்கிழமை 2-வது ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. முதல் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
111 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா மூலம் ரன் குவிக்க அனுமதிக்காமல் இந்திய அணி நெருக்கடியளித்தாலும், வருண் வீசிய 3 வது ஓவரில் கப்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார்.
எனினும், பும்ரா ஓவரில் பவுண்டரி அடித்த கப்தில், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அணி மீண்டும் முயற்சித்தது.
ஆனால், ரவீந்திர ஜடேஜா வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் மிட்செல் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தை இந்தியாவின் வசமிருந்து பறித்தார்.
இதன்பிறகு, ஓவருக்கு 1 பவுண்டரி போக வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 4 க்கு கீழ் குறைந்தது. ஷர்துல் தாக்குர் வீசிய 10 வது ஓவரிலும் மிட்செல் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாச வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 3 க்கு கீழ் குறைந்தது.
கடைசி 10 ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 28 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.
வெற்றிக்கு அருகே சென்ற நிலையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் 49 ஓட்டங்களுக்கு பும்ரா பந்தில் பவுண்டரி எல்லையில் ராகுலிடம் கேட்ச் ஆனார். அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அவர் 1 ஓட்டத்தை தவறவிட்டார்.
பின்னர் ஹார்திக் பாண்டியா ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி கேன் வில்லியம்சனும் அதிரடி காட்ட நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி 6 ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஷர்துல் தாக்குர் வீசிய 15 வது ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்க நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.