வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே சென்னை, புதுச்சேரி இடையே நவம்பர் 19 ஆம் திகதி அதிகாலை கரையைக் கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டது.
இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.