மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய பெண் ஒருவர் தான் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் போலீசார் போன் நம்பரை கொண்டு அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் போலீசார் செல்வதற்குள் அந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்டவர் 23 வயது போஜ்புரி நடிகை என்பது தெரியவந்தது. மேலும் பணம் கேட்டு வந்த மிரட்டல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதும் உறுதியாகி உள்ளது.
அதாவது கடந்த 20-ந்தேதி நடிகை தனது தோழியுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி கொண்டாட சென்றார். ஓட்டலில் அப்பெண்ணை சந்தித்த 2 பேர் தாங்கள் போதைபொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர். போதைபொருள் உபயோகப்படுத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.20 லட்சம் தரும்படி கேட்டு உள்ளனர். இதனால் பயந்துபோன நடிகை அவர்களுக்கு ரூ.12 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து 2 பேரும் மேலும் பணம் தருமாறு நடிகையை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மிரட்டி பணம் பறித்த சூரஜ் மோகன் பர்தேஷி (வயது38), பிரவின் ரகுநாத் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.