சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை, தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி பொலிஸார் பெண்ணை விடுவித்துள்ளனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர் , மது போதையில் தனது 20 வயது மகளிடம் புதன்கிழமை இரவு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி கண்டித்துள்ளார். அதனையும் மீறி அத்துமீற முயன்றுள்ளார். மகளை காப்பாற்ற ஒரு கட்டத்தில் கணவனை சுத்தியலால் தாக்கினார். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து அந்தப்பெண் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில் தற்காப்புக்காகவும், மகளின் பாதுகாப்புக்காகவும், கணவனை தாக்கியதாகவும், அதில் இறந்துவிட்டதாகவும் மனைவி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசார் கைது செய்த பெண்ணை விடுவித்துள்ளனர். திருவள்ளூர் எஸ்பியாக அரவிந்தன் ஐபிஎஸ் இருந்தபோது இதேபோன்றதொரு கொலை சம்பவத்தில் கொலை செய்த பெண்ணை கைது செய்யாமல் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.