மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றுக்குள் பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக கரிமேடு பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
பொலிஸ் விசாரணையில், இறந்து கிடந்த நபர், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (75), கிருஷ்ணவேணி (65) தம்பதியின் மகன் மணிமாறன்(45) எனத் தெரியவந்தது.
மேலும் பெற்றோரே மகனை எரித்துக் கொன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறியதாவது:
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மணிமாறன் அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த அவர், பெற்றோரிடம் தகராறு செய்தார்.
அப்போது கோபமடைந்த தந்தை முருகேசன் மகனை விறகு கட்டையால் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் மகனை உயிருடன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்று காமராஜர் மேம்பாலம் அருகே வைகை ஆற்றுக்குள் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பியது தெரியவந்தது.
இது தொடர்பாக முருகேசன், கிருஷ்ணவேணியை பிடித்து விசாரித்து வருகிறோம். இறந்த மணிமாறனுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர் என்று பொலிஸார் கூறினர்.