கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கர்நாடகத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
கர்நாடகத்தில் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 31 ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா பயிற்சி மையங்கள் போன்றவற்றில் 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.