நடிகர் சிவகார்த்திகேயனின் 20-வது படம் சில தினங்கள் முன்பு காரைக்காலில் தொடங்கியது. இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த நடிகை இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டான், அயலான் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அவர் ஜாதிரத்னலு தெலுங்கு வெற்றிப்படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் தயாராகிறது. புதுச்சேரியை சேர்ந்த கைடு வேலை பார்க்கும் இளைஞனுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பெண் மீது ஏற்படும் காதலே இந்தப் படத்தின் ஒன் லைன் என கூறப்படுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் பூஜையுடன் சில தினங்கள் முன்பு தொடங்கியது. சிவகார்த்திகேயனுடன், சத்யராஜ் பிரதான வேடத்தில் நடிக்கிறார். பிரேம்ஜி-யும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பெண் கதாபாத்திரத்தில் உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். இவர் சென்ற வருடம் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5 வெப் தொடரிலும் நடித்து உள்ளார். ஆக, இந்திய திரையுலகு இவருக்கு புதிதல்ல.
சிவகார்த்திகேயனின் முதல் நேரடி தெலுங்குப் படமான இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. எஸ் தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல் முறை. இந்தப் படம் தவிர ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.