தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனுக்கு உடனடி நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா வியாழக்கிழமை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தலைநகர் கீவ் வரை ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. இதையடுத்து உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு நிதியுதவி உள்ளிட்ட தேவைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கும் என்றும் கூறியுள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நிகழ்வுகளின் விளைவாக அதிர்ச்சியூட்டும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் உலக வங்கி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலக வங்கி இருக்கும் உக்ரைனில் தற்போதைய நிலை பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும். இதனை சரிசெய்ய நாங்கள் பன்னாட்டு நாணய நிதியத்துடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்´ என்று குறிப்பிட்டுள்ளார்.