எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக சரத்குமார் தெரிவித்துள்ள நிலையில், “தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே” என்று ராதிகா கூறியிருப்பது விஷால் அணியை சீண்டுவதாக உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து, விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். ஆனாலும், நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேற்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்நிலையில், சரத்குமார் பேசிய விவகாரம் குறித்து இன்று ட்விட்டரில் ராதிகா மீண்டும் வார்த்தை மோதலை ஆரம்பிக்கும் விதத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே. சரத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
சரத்குமார் போன்றவர்கள் பிரச்னையை மேலும் வளர்க்காமல் நடிகர் சங்கம் அமைதியாக செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களது எண்ணத்திற்கு மாறாக ராதிகா தெரிவித்துள்ள கருத்துக்கள், மீண்டும் வார்த்தை மோதல்களை ஆரம்பித்து விடுமோ என்று திரையுலகத்தினரே அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சரத்குமார் இனியாவது அவர் அணியைச் சேர்ந்தவர்களை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கச் செய்தால்தான், அது நடிகர்கள் சமூகத்திற்கே நிம்மதியாக இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
எதற்காக ராதிகா சரத்தை பற்றி பெருமையடைந்தாரோ அப்படி ஒரு ஒப்பந்தமே பதிவு செய்யப்படவில்லை.இந்த நிமிடம் வரை சங்க இடம் சதயம் சினிமாவிடம்தான் என்று பதிவுத்துறை அதிகாரி நாசரிடம் சொல்லியிருக்கிறாரே.இதற்காக ராதிகா அவமானப்படுவாரா?அவர் அவமானம் மட்டும் பட்டால் போதும்.காற்றாடியையும்,சேலையையும்,நாற்காலியையும் தேடி அலைய வேண்டாம்.