பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் ‘சல்யூட்’ என்ற மலையாள படத்தில் நடித்து தயாரித்து உள்ளார். இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக துல்கர் சல்மான் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இது கேரள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துல்கர் சல்மானை கண்டிக்கும் வகையில் அவரது படங்களை இனிமேல் தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என்று அறிவித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் தரப்பில் அளித்த விளக்கத்தில், ‘சல்யூட்’ படத்தை திரையரங்குகளில் பிப்ரவரி 14-ந் தேதிக்கு முன்பு வெளியிட்டு விடுவோம் என்று ஓ.டி.டி. தளத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் கொரோனா காரணமாக திட்டமிட்டபடி தியேட்டரில் வெளியிட முடியவில்லை. சல்யூட் படத்தை மார்ச் 30-ந் தேதிக்குள் ஓ.டி.டி. வசம் ஒப்படைக்கவில்லை என்றால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகிவிடும். எனவேதான் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
விளக்கத்தை கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டு துல்கர் சல்மானுக்கு விதித்த தடையை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.