அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்பதை வலியுறுத்தி நாட்டில் மருத்துவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வைத்தியர்கள் தொழில் சங்க ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று நண்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை அரசின் செயற்பாட்டினை கண்டித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது, மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து கண்டன பேரணியாக சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலில் இருந்து கவனயீர்பு பேரணியாக கோசங்கள எழுப்பியவாறு வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனை முன் முள்ளியவளை முல்லைத்தீவு வீதியில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.