இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 11,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசி ஏற்றிச் செல்லும் “ச்சென் குளோரி” என்ற கப்பல் இன்று (12) கொழும்பை வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான பலதரப்பு ஒத்துழைப்பின் கீழ் இந்தியா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16,000 மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான உறவைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவினால் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விநியோகம் ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ள நிலையில் கடன் வசதியின் கீழ் இந்தியா இதுவரை 270,000 மெட்ரிக் தொன் எரிபொருளை பெற்றுக் கொடுத்துள்ளது.