ஐபிஎல்-இன் வியாழக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். வேட் (12), ஷுப்மன் கில் (13) ஆகியோர் சொற்ப ஓட்டங்களிலேயே வெளியேறினர். அதற்கடுத்து வந்த விஜய் சங்கரும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தார். அபினவ் மனோகர் பாண்டியாவுக்கு இணை கொடுத்து ஆடியதால் அணியின் ஓட்ட வேகம் சற்று கூடியது.
முடிவில் குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் படிக்கல் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அஷ்வின் 8 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
நின்று ஆடிய ஜாஸ்பட்லர் 24 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த சஞ்சு சாம்சன் (11), டூசன் (6), ரியான் (18), ஜேம்ஸ் நீஷம் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹிட்மயர் 29 ஓட்டங்களை எடுத்து ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. குஜராத் அணி தரப்பில் ஃபெர்கூச,ன் யாஷ் தயாள் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.