பிகாரில் இருந்து உறவினா்களை வரவழைத்து, தனது மாமியாரை கழுத்தறுத்துக் கொன்ற வழக்கில் மருமகள் கைது செய்யப்பட்டாா்.
தப்பிய கொலையாளிகளை பிடிக்க பொலிஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பத்தே சந்த் (78). பிகாரை சோ்ந்த இவா் திருக்கழுகுன்றம் பஜாா் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி பிரேமாபீவி (70), ராஜஸ்தானை சோ்ந்தவா். இவா்களுக்கு 2 மகள்கள், 4 மகன்கள். மூன்றாவது மகன் பிண்டு குமாரின் மனைவி சுஜாதா (27).
வழக்கம்போல் அடகு கடைக்கு பத்தேசந்தும் மகனும் ஞாயிற்றுக்கிழமை சென்று இரவு வீடு திரும்பியபோது முதல் தளத்தில் பிரேமாபீவி அன்வா் கழுத்து அறுத்து கொலையுண்டு கிடந்துள்ளாா். இதுகுறித்து திருக்கழுகுன்றம் பொலிஸில் பத்தேசந்த் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் வழக்குப் பதிவு செய்து, பிரேமாபீவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
முதல்கட்ட விசாரணையில் பிகாரில் இருந்து தனது உறவினா்களை வரவழைத்து மாமியாா் பிரேமாபீவியை கழுத்தை அறுத்து சுஜாதா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுஜாதாவை பொலிஸாா் கைது செய்தனா். மாமியாா் எப்போதும் தன்னை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகவும், அதனை கணவா் தட்டிக்கேட்காமல் தாயாருக்கு சாதகமாகப் பேசியுள்ளாா். இதனால் சுஜாதா பிகாரில் இருந்து தனது தாய்மாமன் மகன்களான சுமீத் (24) மற்றும் தீபன் ( 25) ஆகியோரை வரவழைத்து மாமியாரை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரியவந்தது.