1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சம்மன் அனுப்பியும் பதிலளிக்காததால் அமிதாப் பச்சனுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து சீக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் சீக்கியர் மீதான கலவரங்களை தூண்டியதாக இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நடந்து, முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீக்கியருக்கான நீதி’ என்ற அமைப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
சீக்கிய அமைப்பு தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட், அமிதாப் பச்சனுக்கு, கடந்தாண்டு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பி, பல மாதங்கள் ஆகியும், அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று சீக்கிய அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வாந்த் சிங் பன்னு என்பவர் கூறியுள்ளார். மேலும்,
சம்மனுக்கு பதில் அளிப்பதில் அலட்சியமாக செயல்படும் அமிதாப் பச்சனுக்கு எதிராக இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டுமென, கோர்ட்டில் வலியுறுத்த உள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக ‘சீக்கியருக்கான நீதி’ என்ற இந்த அமைப்பு ஏற்கனவே, 1984-கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் மீது அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்கு தொடுத்திருப்பதும், இவர்களுக்கு நீதிபதி சம்மன்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.