செல்பியால் ஏற்படும் சேதாரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ஒரே ஒரு செல்பியால் 59 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துள்ள சம்பவம் செல்பி மோகம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள அஸ்காட் ரேஸ்கோர்சில் 20 டாலர் பெட் கட்டி விட்டு, தான் பெட் கட்டிய குதிரை ஜெயிப்பதற்காக சேன்டலி என்ற இளம்பெண்ணும் அவரது நண்பர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். அடித்தது யோகம்… அவர்கள் பந்தயம் கட்டிய குதிரை ஜெயிக்கவே 900 டாலருக்கான பரிசுக்கூப்பன் சேன்டலிக்கு வழங்கப்பட்டது.
பரிசு கிடைத்த குதூகலத்தில் அந்த பரிசுக்கூப்பனுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட அவர், அடுத்த நொடியே அதை பேஸ்புக்கிலும் அப்லோட் செய்தார். 15 நிமிடம் கழித்து ஹாயாக பரிசுப்பணத்தை வாங்கப் போனவருக்கு அதிர்ச்சி. “உங்கள் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்தாச்சே…” என்ற அதிகாரி அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார்.
அப்புறம்தான் சேன்டலிக்கு விஷயமே புரிந்தது. அவர் எடுத்த செல்பியில் பதிவாகியிருந்த பரிசுக்கூப்பன் பார்கோடை வைத்து யாரோ கோல்மால் செய்து பணத்தை பெற்று விட்டனர். நிச்சயம் என் பேஸ்புக் நண்பர்களில் ஒருவர்தான் இந்த காரியத்தை செய்திருக்கணும். அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க என்று சாபம் கொடுக்கிறார் சேன்டலி… வேறென்ன செய்ய முடியும்..?