அண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் அதன் அண்டை நாடுகளை பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில், நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் சென்ற ஆண்டு மட்டும் உலகின் பல்வேறு இடங்களில் 6,073 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் போகோ ஹராம் நடத்திய தாக்குதல்களினால் 6,664 பேர் பலியாகியுள்ளனர். உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் பாதியளவிற்கு மேல் போகோ ஹராம், ஐ.எஸ். தீவிரவாதிகளால்தான் நடத்தப்படுகிறது. இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஆப் இக்கனாமிக்ஸ் அன்ட் பீஸ் இன்று வெளியிட்டுள்ளது.
நேற்று கூட நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து நைஜீரிய மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் முஹம்மது புகாரி அறிவுறுத்தியுள்ளார். அண்மையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அந்நாடு துரிதப்படுத்தியிருந்த போதிலும் போகோ ஹராம் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.