சிம்ரன், இனியா, நிகிஷா பட்டேல், கணேஷ், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள படம், ‘கரையோரம்’. இந்த படத்தை எல்.ஆனந்த், ஜெ.ராமலிங்கையா ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். ஜெ.கே.எஸ். டைரக்டு செய்து இருக்கிறார்.
சுஜித் ஷெட்டி இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை, ஸ்டூடியோ 9 சுரேஷ் வெளியிட்டார். விழா முடிவடைந்த பின், இனியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இனியா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கதாநாயகியாக நடித்து வந்த நீங்கள் ஒரு படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினீர்கள். இன்னொரு படத்தில் வில்லியாக நடித்தீர்கள். இந்த அளவுக்கு இறங்கி வந்தது ஏன்?
பதில்:- கதாநாயகியாகத்தான் படங்களில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு நடிகை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன். நட்புக்காக, ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆடினேன். வில்லி வேடம் எனக்கு பிடித்து இருந்ததால், நடித்தேன். கதாநாயகியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.
கேள்வி:- சக கதாநாயகிகளில் சிலர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்களே… நம்மால் அப்படி வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறதா?
பதில்:- நான் பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை. திறமையாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இப்போது என் கைவசம் பத்து படங்கள் இருந்திருக்கும். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன். அப்படி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை.
கேள்வி:- நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விட்டீர்களா?
பதில்:- இன்னும் அடையவில்லை. தமிழ் பட உலகில் எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. மலையாள பட உலகிலும் பிரபலமாகி வருகிறேன். தெலுங்கு, கன்னட பட உலகில் இப்போதுதான் அறிமுகமாகி இருக்கிறேன்.
கேள்வி:- எந்த கதாநாயகனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்:- ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும். இந்தியில், ஷாகித் கபூருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு இனியா கூறினார்.