சென்னை: பிரபல நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்திக். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, கிழக்கு வாசல்,பொன்னுமணி உள்ளிட்ட படங்களில் பிலிம்பேர் விருது வாங்கியுள்ளார். தொடந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். கலைமாமணி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் நந்தி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வேளையில் திடீரென அரசியலிலும் நுழைந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவரானார். தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார் கார்த்திக். வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்போம். கடந்த தேர்தலில் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் போனது.
முதல்வர் ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்ற குணம் உள்ளவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நேற்றிரவு, 9:00 மணிக்கு, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.