நடைப்பயிற்சி முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கும்’ என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி உடல் நலத்துக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது நடை பயிற்சி அல்லது ‘ஜாக்கிங்’ முதியோர்களின் நினைவாற்றல் மற்றும் அறியும் திறனை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக 18 முதல் 31 வயதுள்ள 29 இளைஞர்கள் மற்றும் 55 முதல் 82 வயது வரையிலான 31 முதியோர்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
அவர்களுக்கு ‘ஆக்டிகிராப்’ என்ற சிறிய கருவியை அவர்களது உடலில் பொருத்தினர். அக்கருவி நடை பயிற்சியின் போது அவர்கள் நடக்கும் விதம் குறித்த தகவல்களை பதிவு செய்தன. மேலும் நரம்பியல் மனோதத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அதன் மூலம் அவர்களின் நினைவாற்றல் திறன், திட்டமிடுதல் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் விதம் குறித்து அறியப்பட்டது. அதில், நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்லும் முதியோர்களின் நினைவாற்றல் மற்றும் செயலாக்கத்தை அதிகப்படுத்தியது தெரியவந்தது.
அதே நேரத்தில் இளைஞர்களுக்கு அந்த அளவு பயனை தரவில்லை என்றும் கண்டறியப்பட்டது.