கோவையில் டிவி, சினிமா நடிகை என்று கூறி பெண்களிடம் நகை பறிக்க முயன்ற பெண்மணி ஒருவர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் செயல்பட்டுவரும் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில், பெண்களே பயணிகள் போன்று பயணித்து நகை பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு பெண் காவலர்களே பயணிகள் போல பேருந்துகளில் சென்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிரஸ்காலனி, பாலாஜி கார்டனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வீரமணி என்பவரது மனைவி பாண்டிமீனா என்பவர் நேற்று முன்தினம் மாலை துடியலுாரில் இருந்து உக்கடத்துக்கு நகர பேருந்தில் சென்றார்.
அப்போது, நான்கு பவுன் நகையுடன் வைத்திருந்த கைப்பையை, இளம்பெண் ஒருவர் பாண்டிமீனவின் பையை திருடிகொண்டு பேருந்திலிருந்து தப்ப முயன்றார். அப்போது பேருந்தில், கண்காணிப்பு பணியில் இருந்த தனிப்படை போலீசார் இளம்பெண்ணை பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரை, மேலுாரை சேர்ந்த ஜானு (எ) சாமுண்டீ ஸ்வரி எனத்தெரிந்தது. இவரது கணவர் மூர்த்தி என்பவர் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதன்பின், நகை திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது: கணவர் இறந்தபின், ஜானு நகை திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளார். இவர் நகை திருட்டு தொடர்பாக 2009 ஆம் ஆண்டு சாய்பாபாகாலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவையில் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்பின், சிறையில் இருந்து வெளியே வந்தவர், ஈரோடு சென்று, 15,000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அங்கிருந்து கோவை வந்து, பஸ்களில் பயணி போல சென்று, பெண்களிடம் நகை மற்றும் பணத்தை திருடி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
தன்னை, சினிமா துணை நடிகை டிவி நடிகை என்று அறிமுகம் செய்து பலரிடமும் கைவரிசை காட்டி வந்துள்ளார். திருடும் நகை மற்றும் பணத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக மேக்கப் செலவுக்காக பயன்படுத்தியுள்ளார். இவருடன் மதுரையை சேர்ந்த பெண்கள் சிலரும் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில், அனைவரும் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.