நடிகர் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா இன்று எளிமையாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரஜினி தற்போது பா.ரஞ்சித்தின் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாள் தினத்தில் எந்திரன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எந்திரன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியானது.(இதைப் பற்றி நாம் ஏற்கனவே மழையால் தள்ளிப்போகிறதா எந்திரன் 2 அறிவிப்பு? என்று செய்தி கொடுத்திருந்தோம்)
இந்நிலையில் இன்று மிக எளிமையாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு படத்தின் பூஜையை மிக எளிமையாக நடத்தி விட்டதாக கூறுகிறார்கள்.
வரும் 14ம் தேதி முதல் எந்திரன் 2 வின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஜனவரி மாதத் தொடக்கம் அல்லது பொங்கல் கழித்து ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்திரன் 2 குறித்து இயக்குநர் ஷங்கர் இதுவரை எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.