பாரிஸில் இஸ்லாமிய அரசு அமைப்பின் பெயரில் தன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பாலர் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முன்னர் கூறியிருந்த தகவல், ஒரு பொய் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தான் வகுப்பறையில் தனியாக இருந்தபோது, கத்திரிக்கோல் மற்றும் அட்டை பெட்டிகளை வெட்டும் கத்தியால் தன்னை ஒருவர் தாக்கியதாக ஆசிரியர் கூறியதை அடுத்து, வடக்கு பாரிஸ் புறநகர்ப் பகுதி எங்கிலும் தாக்குதலாளியைத் தேடி தேடுதல் வேட்டை ஒன்றும் நடத்தப்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆசிரியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளதாக பின்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக அரசதரப்பு வழக்குரைஞர் அலுவலகம் கூறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 130 மக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஒருமாத முடிவில் இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.