இந்திய தலைநகர் புதுடில்லியில் 2000 சிசி மற்றும் அதற்கு அதிகமான என்ஜின் திறன் கொண்டிருக்கும் புதிய டீசல் வாகனங்களை விற்பனை செய்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டில்லியில் வளர்ந்து வரும் வெளிப்புற காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே அதிக திறன் கொண்டபுதிய டீசல் கார்களையும் தலைநகர் டில்லியில் பதிவு செய்ய அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட வர்த்தக பயன்பாட்டு டீசல் வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் டில்லிக்குள் நுழைவதற்கான முக்கிய சாலைகளான என்.எச். 8 மற்றும் என்.எச். 1 சாலைகள் வழியாக டீசல் வாகனங்களை செலுத்த முடியாது என்றும், அவர்களுக்கான மாற்று பாதைகளை டில்லி காவல்துறை தெரிவிக்க வேண்டும் எனவும் இன்றைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள அனைத்து வாடகை வாகனங்களையும் சி.என்.ஜி.க்கு மாற்றவும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
அதே சமயம் டில்லிக்குள் உள்நுழையும் வர்த்தக பயன்பாட்டுக்கான டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் பசுமை வரி அல்லது சுற்றுச்சூழல் இழப்பீடு வரித்தொகையை இரட்டிப்பாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த இது தொடர்பான இடைக்கால உத்தரவு ஒன்றில், டில்லியில் டீசல் கார்களை புதிதாக பதிவு செய்யக் கூடாது என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலான பயன்பாட்டு வாகனங்களை மறு பதிவு செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது. தவிர மத்திய, மாநில அரசுகள் இனிமேல் டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
உலக அளவில் மக்களின் உயிரிழப்புகளுக்கான முதல் பத்து காரணங்களில் ஒன்றானதும், இந்திய அளவில் முதல் முக்கிய ஐந்து காரணங்களில் ஒன்றானதுமான காற்று மாசுபாட்டால், டில்லியில் ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 30,000 வரையிலான உயிர் பலிகள் ஏற்படுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
நேற்று செவ்வாய்கிழமை வெளியாகிய அந்த அறிக்கையில், போக்குவரத்து அமைப்புகளில் மாற்றம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களுக்கான அவசர தேவை உள்ளதாகவும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.