இன்டர்நெட்டில் வெளியான ‘பீப்’ பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் விவகாரத்தில் வருகிற 29–ந் திகதிக்குள் சென்னை மற்றும் கோவை போலீஸ் நிலையங்களில் சிம்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு அனிருத் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி 2 பக்க விளக்க கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
சமூக வலைதளங்களில் வெளியான ‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் அந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை. ஆனால் எனது பெயர் இதில் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. நான் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன். நான் ஒப்பந்தங்கள் மூலம் சினிமாவுக்கு மட்டும் இசையமைத்து வருகிறேன்.
‘பீப்’ பாடலுக்கு நான்(அனிருத்) இசையமைக்கவில்லை என்று நடிகர் சிம்பு கூறி உள்ளார். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது நான் தமிழகத்தில் இல்லை. இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்று இருந்ததால், நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கமுடியவில்லை.
இருந்தபோதிலும், என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் என்னை எந்த நேரத்திலும் ஆஜராக சொன்னால் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
விளக்க கடிதத்தை பெற்றுக் கொண்ட போலீசார் அனிருத்திடம் ½ மணி நேரம் விசாரித்தனர். நாங்கள் விசாரணைக்கு அழைத்தால் உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினர். எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விளக்கம் கொடுப்பேன் என்றார்.
மேலும், ‘பீப்’ பாடலுக்கு அனிருத் இசையமைக்கவில்லை என்று சிம்பு டுவிட்டரில் கூறியிருந்த தகவலை ஒரு சி.டி.யில் பதிவு செய்து கொடுத்தார். அதனை போலீசார் பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அனிருத் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ‘பீப்’ பாடல் வழக்கில் அனிருத் நேரில் ஆஜரானார். அவரிடம் தேவையான தகவல்களை கேட்டு விசாரித்துள்ளோம். அவர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருவதாக கூறி உள்ளார்.
நடிகர் சிம்பு 29–ந் திகதிக்குள் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவர் நேரில் ஆஜராகும்போது அவர் மீதான புகார் தொடர்பாக விசாரிப்போம். அதன்பிறகு தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.