பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சமுகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன.
பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை கட்டுப்பாட்டையும் மீறி சமுகவலைதளங்களை பாவிக்கின்றனர் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பிப்ரவரி 9 ஆம் தேதியை இந்த ஆண்டிற்கான பாதுகாப்பான இணைய பாவனைக்கான நாளாக, பிரிட்டனின் சிறுவர்களுக்கான தொலைக்காட்சியான சிபிபிசியின் குறித்த ஆய்வு அறிவித்துள்ளது.
பதின்மூன்று வயதிற்கு குறைவான சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பாவிப்பதாக அறிந்து கொண்டால், தமக்கு அறிவிக்குமாறு சமுகவலைதளமான இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
இணையத்தளங்கள் கற்றுக் கொள்வதற்கும், அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் சிறந்த இடங்கள் என தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இது தொடர்பில் சிறுவர்களுக்கு நேர்த்தியான அறிவூட்டலும் வழிகாட்டலும் அவசியம் என தெரிவித்துள்ளது.