வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலி பண்டிகை வருகிற 24-ந் திகதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீரை ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
மேலும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பெரிய தொட்டிகளில் நிரப்பி உள்ளே குதித்து விளையாடுவார்கள்.
ஹோலி பண்டிகை அன்று மட்டும் அதிகளவில் தண்ணீர் வீணாக்கப்படும். கடந்த மழைக்காலத்தின் போது சரியாக மழை பெய்யாததால் மும்பையில் தற்போது குடிநீர் வெட்டு அமலில் உள்ளது.
ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், இந்த ஆண்டு மழைக்காலம் வரையிலும் தண்ணீர் தேவையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி உள்ளது. இந்த நிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ. அமீத் சாட்டம் மும்பை மாநகராட்சியின் நீரியல் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஹோலி பண்டிகை அன்று தண்ணீரை வீணாக்குபவர்கள் மற்றும் தேவையில்லாமல் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹோலி பண்டிகை அன்று தண்ணீரை வீணாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஹோலி அன்று சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி கொண்டாடுவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்’’ என்றார்.