நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் லோயுதம் (84). உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று காலை 9.30 மணியளவில் உடல் நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலனின்றி வேலாயுதம் மரணம் அடைந்தார்.
தொழில் அதிபரான வேலாயுதம் சுதர்சன் சிட்பண்ட் நடத்தி வந்தார். 80–க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் தயாரித்தார். சிவாஜிகணேசன் நடித்த ராமன் எத்தனை ராமனடி, கே.ஆர்.விஜயா நடித்த தீர்க்க சுமங்கலி, நம்ம வீட்டு தெய்வம், கஸ்தூரி விஜயம், மேயர் மீனாட்சி, வாயாடி, திருடி, சூதாட்டம் உள்பட தமிழ் மற்றும் மலையாள படங்களையும் தயாரித்தார்.
கே.ஆர்.விஜயாவை காதல் திருமணம் செய்து கொண்டார். கே.ஆர்.விஜயா, வேலாயுதம் தம்பதியினருக்கு ஹேமலதா, என்ற மகள் உள்ளார். மறைந்த வேலாயுதத்துக்கு கே.ஆர்.விஜயா தவிர சாரதா, விலாசினி என்ற 2 மனைவிகளும் அவர்களுக்கு அசோக்குமார், மனோஜ்குமார், பிரேமா, புஷ்பா, அனிதா உள்பட 7 குழந்தைகளும் உள்ளனர். வேலாயுதம் உயிர் பிரியும் போது அனைவரும் ஆஸ்பத்திரியில் அவர் அருகே இருந்தனர். வேலாயுதம் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது.