ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அண்ணன் ராமமூர்த்தி நாயுடு மகன் நடிகர் நாரா ரோகித். இவர் ‘‘ராஜா செய் வேஸ்டே’’ (ராஜா கையை வச்சா) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி தாரக் ரத்னா வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விஜயவாடாவில் நடந்தது. முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு பாடல் சி.டி.யை வெளியிட்டார். அவர் பேசியதாவது:–
எனது குடும்ப உறுப்பினர்கள் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. சினிமாவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. சினிமாவில் இருந்த என்.டி.ராமராவ்தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். இந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அரசியலும் தெரியும், சினிமாவும் தெரியும்.
இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள். பாலகிருஷ்ணா படம் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது சில படங்கள் வருகிறது. சமூகத்தை கெடுக்கும் வகையில் அது இருக்கிறது. சில படங்களை பார்த்தால் பயமாக இருக்கும். இரவில் தூக்கம் வராது. தூக்கம் வராததால் இல்லாத நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் இல்லாமல் இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.