இந்தி திரையுலக நகைச்சுவை நடிகர் ரசாக் கான் மும்பை பைகுல்லாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று மதியம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பாந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக நடிகர் ரசாக் கான் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது.
ரசாக் கான் மரண செய்தி அறிந்து இந்தி திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ரசாக் கானின் இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் பைகுல்லா நரியல்வாடி கபரிஸ்தான் பகுதியில் நடைபெறுகிறது. நடிகர் ரசாக் கான் ‘ஹலோ பிரதர்’, ‘ஹூங்க்மா’, ‘ஹெரா பேரி’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.