ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய படம் “கில்லிங் வீரப்பன்”. சிவராஜ்குமார் நடிப்பில் இப்படத்தின் கன்னட பதிப்பு ஜனவரி 1ம் திகதியும், தெலுங்கில் ஜனவரி 7ம் திகதியும் வெளியானது. மேலும் இப்படத்தின் இந்திப் பதிப்பை நடிகரும் , தயாரிப்பாளருமான சச்சின் ஜோஷி தயாரிக்க பிரம்மாண்டமாக இந்தியில் உருவாக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. இப்படம் வருகிற மே 27ம் திகதி வெளியாக இருக்கிறது. படத்தைத் தயாரித்த சச்சின் ஜோஷி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதைக்காக சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த பல கதைகள், பேட்டிகள் என ஆராய்ந்து உருவாக்கியுள்ளாராம் ராம் கோபால் வர்மா. அதில் ஒரு பகுதியாக வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியது யாவரும் அறிந்ததே. ஆனால் உண்மையில் வீரப்பன் கடத்தத் திட்டமிட்டது ரஜினிகாந்தை தான் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ராம் கோபால் வர்மா.
பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கருத்து மட்டுமின்றி, ”ரஜினிகாந்தை விட வீரப்பன் மிகவும் பிரபலமானவர். வீரப்பன் கண்டிப்பாக ஷேகர் கபூரின் ‘பண்டிட் குயின்’ படத்தை விட பிரம்மாண்ட படமொன்றை உருவாக்கும் படி சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் பூலான் தேவி 22 பேரை மட்டுமே கொலை செய்தவர், ஆனால் வீரப்பனோ 92 போலீஸ் காரர்களை கொலை செய்தவர்”..” வீரப்பன் குறித்த உண்மைகளைச் சேகரித்த போது பல விஷயங்களை என்னால் நம்பவே முடியாமல் இருந்தது. எனினும் இவற்றையெல்லாம் விட வீரப்பனைக் கொல்வதற்கு நடத்தப்பட்டதாகக் கூறும் நாடகம் தான் என்னால் முற்றிலுமாக நம்ப முடியவில்லை” என ட்விட்டரில் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.