பாபா சாகேப் என்று அனைவராலும் அழைக்கப்படும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு ‘பாபா சாகேப்’ என்ற பெயரிலேயே சினிமா படமாகிறது.
காமராஜ், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் ‘பாபா சாகேப் என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து அவர் கூறும்போது, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்கையை மையகருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம்தான் பாபா சாகேப். இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத்தலைவரின் படம் என்பதை கருத்தாக கொண்டு உருவாகவிருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன்.
ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்கையை திரைப்படமாக எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாபா சாகேப்.
அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார்.
அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அன்னல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார் தயாரிக்கிறார்.