இந்தி நடிகர் சல்மான்கான் தனது நடிப்புத் தொழிலுக்கு பெண்களை உதாரணப்படுத்தி அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சுல்தான் படத்தில் வில்லனை தலைக்கு மேலே தூக்கி வீசும் காட்சிகளில் நடித்து களைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் என்னால் நடக்க கூட முடியாமல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வேதனையை உணர்ந்தேன் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த கருத்து பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இணையதளங்களிலும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்து கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய மகளிர் ஆணையம் சல்மான்கான் ஒரு வாரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு நோட்டீசும் அனுப்பி இருக்கிறது.
நிர்பயாவின் தாயார், சல்மான்கான் கருத்து பெண்களை கேவலப்படுத்தும் செயல் என்று கூறி உள்ளார். ஒரு சிறுமி டுவிட்டரில், ‘சல்மான்கான் சொன்ன கருத்துக்கு பிறகும் அவருக்கு பெண் ரசிகைகள் இருந்தால் நான் இந்த உலகத்தை பார்த்தே பயப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சிவசேனாவை சேர்ந்த மனிஷா ஹாலண்டே கூறும்போது, ‘‘சல்மான்கான் பெண்களை அவமானப்படுத்துவது போல் கருத்து சொல்லி இருக்கிறார்’’ என்றார்.
சல்மான்கான் கருத்துக்காக அவரது தந்தை சலீம்கான் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் சல்மான்கானை கண்டித்து பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மும்பை பாந்த்ரா பகுதியில் சல்மான்கான் வீடு உள்ளது. அந்த வீட்டின் முன்னால் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர்.
அவர்கள் சல்மான்கானை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் நுழையவும் முயற்சித்தார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் அங்கு நின்று கண்டன கோஷம் எழுப்பினார்கள். சல்மான்கான் உருவப்பொம்மையை எரிக்கவும் முயற்சி செய்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து சல்மான்கான் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.