மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் முகேஷ். சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில் இவர் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.
எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்ட பிறகு நடிகர் முகேஷ் தனது தொகுதி மக்களை மறந்து விட்டதாகவும் அவர் தொகுதி பக்கமே தலைகாட்ட வில்லை என்றும் காங்கிரசார் குற்றம்சாட்டினார்கள்.
மேலும் கொல்லம் பகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கொல்லம் மேற்கு போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில் முகேசை கடந்த ஒரு மாதமாக காணவில்லை அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.
போலீசாரும் புகாரை சரியாக படித்துப்பார்க்காமல் முகேஷ் மாயமானதாக வழக்கு பதிவு செய்து அதற்கான மனுவின் ரசீதையும் கொடுத்துவிட்டனர். இந்த தகவல் வெளியானதும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் காங்கிரசாரையும் போலீசாரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பிரச்சினை பெரிதானது. கேரள அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொல்லம் உதவி போலீஸ் கமிஷனரிடம் போலீசார் மீது புகார் செய்யப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை சரியாக பரிசீலிக்காமல் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதைதொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கொல்லம் மேற்கு போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிரிஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கொல்லம் போலீஸ் கமிஷனர் சதீஸ் பினோ பிறப்பித்து உள்ளார்.