பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவர் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜியோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாவது திருமணம் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகளை இம்ரான் கான் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் நிச்சயம் அறிவிப்பேன். வெளிப்படையாக கொண்டாடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானின் முதல் மனைவி பிரிட்டன் வாழ் பாகிஸ்தானி பத்திரிக்கையாளர் ஜெமிமா கோல்ட்ஸ்மித். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பின்னர் இரண்டாவதாக அரசியல் செய்தி தொகுப்பாளரான ரெஹம் கானை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஒன்பதே மாதங்கள் வாழ்ந்த நிலையில் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணம் என்று செய்திகள் வெளியானது.
இம்ரான் கான் கட்சியின் செய்தி தொடர்பாளர் நயிமுல் ஹகியு கூறுகையில், “இம்ரான் கான் திருமணம் தொடர்பாக வந்த வதந்திகள் முற்றிலும் தவறானவை. அவர் இங்கிலாந்தில் தனது மகன்களுடன் தற்போது நேரத்தை செலவிட்டு வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் திரும்பி வருவார்” என்றார்.