ரஜினி அமெரிக்காவுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவர் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றிய எந்த செய்திகளும் இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையில், ரஜினிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் இது வெறும் வதந்திதான். அவர் நலமாக உள்ளார் என்று கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
சமீபத்தில் ‘கபாலி’ படத்திற்காக தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு யாகம் செய்ய வந்திருந்த, ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்களை தெரிவித்தார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் கூறினார். இதனால், மீண்டும் ஊடங்கங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ரஜினியின் உடல் நிலை குறித்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் ஆசிரம் ஒன்றிற்கு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் சென்று வழிபட்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மேலும், ஆசிரமத்தை சேர்ந்த ஒருவருடன் ரஜினி சிரித்துக் கொண்டே உரையாடி வருவதுபோலவும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் எல்லாம் ரஜினியின் உடல்நிலை குறித்து மறுபடியும் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது எனலாம்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ‘கபாலி’ படம் வெளிவரும்போது ரஜினி, சென்னை திரும்பிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ஆகஸ்ட் மாதத்தில்தான் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பியதும் ஷங்கரின் ‘2.ஓ’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.