விராட் கோலி – அனுஷ்கா சர்மா… இந்த பிரபலங்களின் காதல் வாழ்க்கை தற்போது ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ரகசியமாக பயணித்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் முன்னிலையில் வீட்டில் சந்திப்பது, உறவினர்களின் திருமணங்களில் ரகசியமாக கலந்து கொள்வது… என கேமரா கண்களில் இருந்து சிக்காமல், மறைந்து மறைந்து தங்கள் காதலை பரிமாறிக்கொள்கிறார்கள்.
‘ஏன் இந்த இருட்டு வாழ்க்கை…?’ என்று அனுஷ்காவை கேட்டால்… ‘நல்ல செய்தி சொல்லும் வரை இருட்டு வாழ்க்கையே நல்லது…!’ என்று சூசகமாக பதிலளிக்கிறார்.
‘சரி…! ஏதாவது ஒரு கட்டத்தில் அவசர… அவசரமாக திருமணம் செய்து கொள்வீர்களா…?’ என்று கேட்டதற்கு, ‘அவசர திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை…!, என்னுடைய தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களே போதும்…!’ என்று பொடி வைத்து பேசுகிறார்.
‘அவசர திருமணம்’ என்றாலே பதறும் அனுஷ்கா, அதுபற்றி சொல்கிறார்…
“பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினையை சந்திக்கின்றன. இதன் அடிப்படைக் காரணங்களில் ‘அவசரக் கல்யாணம்’ தான் முதலில் நிற்கிறது. காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் காதல் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக்கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்ற படிகட்டுகளை ஏறிவிடுகிறார்கள்.
காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவே கூடாது. நிதானமாக தங்களது நிலைமையை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தை பற்றி தெளிவாக பேசி ஒருமித்த கருத்துக்கு உடன்பட வேண்டும். அதற்கான வேலைகளில் தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் அனுஷ்கா, காதலிப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார்.
“பொதுவாக காதலிப்பவர்கள்…. வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், தங்கள் காதல் விவகாரத்தை கூறி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம் பிடிக்கவும், நம் காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
அதற்கு பிறகும் அவர்களது எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை. ஆனால், காதல் விவகாரம் வீட்டில் தெரியவரும் போது, அதிலிருந்து தப்பித்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறி அவசர அவசரமாக திருமணத்தை முடித்து கொண்டால், காதல் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடும்.
அவசர கோலத்தில் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் காதலர்கள் இருவருமே வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றை இழந்து, கிடைத்ததை கொண்டு வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கை துணையின் மீது தங்களது கோபத்தை திருப்புவார்கள்.
என்னுடைய தோழிகளில் சிலர் இன்று அப்படிப்பட்ட ஒரு கசப்பு வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது, காதல் ஜோடிகளை தனிமை நிலைக்கு தள்ளிவிடும். ‘இத்தனை கஷ்டங்களை தரும் அவசர திருமணம் வேண்டுமா…?’ என்பதை பலமுறை யோசித்து அதற்கு பின்னர், முடிவெடுங்கள்” என்று அறிவுரைகளை உதிர்க்கிறார்.