மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மும்பை ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.
இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை மானபங்கம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண் நண்பர் உடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது ராகுல் சிங் தனது தோழி ஒருவருடன் அங்கு இருந்தார். ராகுல் சிங்கிற்கும், மானபங்கம் செய்யப்பட்ட நடிகையின் ஆண் நண்பருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து உள்ளது. உணவகத்தில் அந்த நபரை பார்த்ததும் ராகுல்சிங் அவரிடம் சென்று போதையில் தகராறு செய்து இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது அவர், நடிகையை மானபங்கம் செய்து உள்ளார்.
இது தொடர்பாக அம்போலி போலீசார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.