இந்திப்பட திரையுலகில் கான் நடிகர்களுக்கு இணையாக நடிப்பில் அசத்தி வருபவர் நடிகை வித்யா பாலன். தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.
தற்போது வித்யாபாலன் ‘கஹானி 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது.
கடந்த வாரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு மும்பை திரும்பிய வித்யா பாலனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது குடும்ப டாக்டர் ஜூகுவில் உள்ள வித்யா பாலனின் வீட்டுக்கு சென்று ரத்தமாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த பரிசோதனை முடிவில் வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டாக்டர் குழுவினர் அவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உள்ளனர். மேலும் வீட்டில் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் ஒரு டாக்டர் மற்றும் 2 நர்சுகள் வீட்டிலேயே தங்கியிருந்து வித்யா பாலனின் உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகை வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி அறிந்ததும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடிகை வித்யா பாலன் வசித்து வரும் வீட்டில் சென்று கொசு உற்பத்தி பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டின் மொட்டை மாடியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவின் லார்வாக்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அந்த லார்வாக்கள் அழிக்கப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் யஷ் சோப்ரா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.