நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தத்தையும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணத்தையும் நடத்த இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை இரண்டு முறை நடத்தப்போவதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாக சைதன்யா இந்து. இவர்கள் திருமணம் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
ஆனால் சமந்தா குடும்பத்தினர் கிறிஸ்தவ முறைப்படி நடத்த வேண்டும் என்கிறார்களாம். இதனால் திருமணத்தை எப்படி நடத்துவது என்பதில் குழப்ப நிலை உருவானது.
தற்போது இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை திருமணத்தை நடத்தலாம் என்று உறவினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி சமந்தாவின் சொந்த ஊரான சென்னையிலும் இந்து முறைப்படி நாக சைதன்யாவின் சொந்த ஊரான ஐதராபாத்திலும் திருமணம் நடக்கும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் ஐதராபாத்தில் ஒரே வீட்டில் வசிப்பதுபோன்ற படங்கள் இணையதளங்களில் பரவி உள்ளன. படவிழாக்களுக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு கணவர் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.