நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில், ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வரும் முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது.
இந்த நெருக்கமான காட்சிகள், அமிதாப் பச்சன் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரன்பீர் கபூர் சமீபத்தில் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்தது.
அதாவது, ஐஸ்வர்யாராயுடனான நெருக்கமான காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ரன்பீர் கபூர் அளித்த பதிலில், “முதலில் அவரது (ஐஸ்வர்யா ராய்) கன்னத்தை தொடக்கூட தயங்கினேன், பயத்தில் என் கைகள் நடுங்கின. பின்னர் தயக்கம் இன்றி நடிக்குமாறு கூறி ஐஸ்வர்யா ராய் தான் எனக்கு ஊக்கமளித்தார். இப்படி ஒரு வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தேன். வாய்ப்பு கிடைத்தது அதில் சிக்சர் அடித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
தனது சர்ச்சை பேச்சுக்கு ரன்பீர் கபூர் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
நான் அளித்த பேட்டி மிகவும் தவறான சுவையுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்போது புரிந்து கொள்ளப்பட்ட அர்த்தத்தில் நான் பேசவில்லை. இந்த பிரச்சினையில் என் மனது புண்பட்டு உள்ளது. எனது கபடமற்ற பேச்சு ஊதி பெரிதாக்கப்பட்டு விட்டது.
ஐஸ்வர்யா ராய் மிகச் சிறந்த நடிகை மட்டும் அல்ல, என் குடும்ப நண்பர். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த திறமைசாலி. அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர். “ஏ தில் ஹை முஷ்கில்” படத்தில் அவரது பங்களிப்பிற்கு நான் எப்போதும் கடமை பட்டவனாக இருப்பேன். நான் ஒருபோதும் அவரை அவமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.