விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர் ஜெக ஜீவன்ராம்தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது55). இவர் கரகாட்டகுழுவில் கிராமிய பாடகராக இருந்து வந்தார். பருத்திவீரன் படத்தில் கரகாட்ட குழுவில் பாடியுள்ளார்.
மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். நேற்று அந்த பகுதியில் ஒருவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பாண்டி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினார்கள்.
அப்போது காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் அருகில் பாண்டி இறந்து கிடந்தார். இறந்த பாண்டியின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். அவரது உடலை பார்த்த அவரது மனைவி பச்சையம்மாள் கதறி அழுததில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் இறந்து போனார். இறந்து போன கணவன்-மனைவி உடல்களை ஒரே தகன மேடையில் எரியூட்டினர். இச்சம்பவம் காரியாபட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.