இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்த வங்தேச சிறுமி, அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின் பங்களாதேஷுக்கு திரும்பினார்.
தனது தாயுடன் சோய்டி
மூன்று வயதாகும் சோய்டி கதூன் பிறப்பிலேயே இடுப்பெலும்பில் இரட்டை பகுதிகள் கொண்டவர்.
சோய்டி கதூனின் கூடுதல் உறுப்பை அகற்றுவது மற்றும் இடுப்பு மண்டலத்தை மறுகட்டமைப்பது குறித்து அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர்கள் பல மாதங்களாக ஆலோசனை நடத்தினார்கள்.
‘சில்ட்ரன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷன்’ என்னும் அறக்கட்டளை, பங்களாதேசத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த இந்தச் சிறுமியை, சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றது.
சோய்டி கதூனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் அரிதானதாகவும், கடினமானதாகவும் இருந்ததாக, விக்டோரியா நகரில் உள்ள மோனாஷ் சிறார் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிரிஸ் கிம்பெர் கூறுகிறார்.
“இந்த அறுவை சிகிச்சை ஒருவரால் தீர்மானிக்கப்பட்டது, இதற்கான ஆய்வு செய்ய நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்ததோடு, அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளையும் முறையாக திட்டமிட வேண்டியிருந்தது” என ‘அவுஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு’ அளித்த பேட்டியில் கிரிஸ் கிம்பெர் தெரிவித்தார்.