தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் அலுவலகங்களை விட அதிகமாக திரைப்பட பயிற்சி தரும் நிறுவனங்கள் வந்துவிட்டன.
இவற்றில் பெரும்பான்மையானவை போலி கல்லூரிகள்தான்.
லட்சக்கணக்கில் காசு பிடுங்கும் இந்த பகல் கொள்ளையர்கள் வாங்கிய காசுக்கு ஒரு சதவீதம் கூட உண்மையாக இருந்து தங்களை நம்பும் மாணவர்களை சினிமா படைப்பாளிகள் அல்லது கலைஞர்கள் ஆக்குவதில்லை.
பதிலாக ஏதோ ஒரு முட்டுச் சந்தில், எந்த உள் கட்டமைப்பு வசதியும் இல்லாமல் சில சினிமா பிரபலங்களைக் காட்டி இன்னும் காசு கறப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா இயக்குநர்களில் இப்போது இருப்பவர்களில் சீனியரும் தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து கிராமத்துப் பக்கம் கொண்டு சென்றவருமான பாரதிராஜா ஒரு திரைப்பட கல்லூரி தொடங்கினார்.
பாரதிராஜா பட்டறையில் இருந்து வந்த யாருமே சோடை போனதில்லை.
அந்த உணர்வு மிக்க கோட்பாட்டின் படி பாரதிராஜாவின் பயிற்சி நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதாம்.
மாணவர்களும் விருப்பத்துடன் விண்ணப்பங்களைத் தருகிறார்கள்.
இதனால் சில பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை இல்லாமல் காற்று வாங்குகின்றனவாம்.
சில நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலையும் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் அரசு திரைப்படக் கல்லூரியும் விண்ணப்பங்கள் கொடுக்க ஆரபித்துள்ளது.
இதில் தருவது 4 ஆண்டு காலத்துக்கான டிகிரி படிப்பு என்பதால், ஒன்று டிகிரி வாங்கலாம் அல்லது பாரதிராஜா என்ற படைப்பாளியின் அனுபவத்தையாவது கற்கலாம் என மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.