போஜ்புரி நடிகையும், மாடலுமான அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் மும்பையில் உள்ள தனது வீட்தில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ்(29). அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அஞ்சலி போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். மேலும் மாடலிங்கும் செய்து வந்துள்ளார்.
அஞ்சலியின் உறவினர்கள் நேற்று அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உறவினர்கள் அஞ்சலியின் வீட்டு உரிமையாளரிடம் சென்று கதவின் டூப்ளிகேட் சாவியை கேட்டுள்ளனர். டூப்ளிகேட் சாவி போட்டு கதவை திறந்தபோது அஞ்சலி ஃபேனில் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அஞ்சலி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை.
என் மகள் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.