துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.
“இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்” என்று அவர் கூறுகிறார்.
துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.
அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.
பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.
“என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்” என்கிறார் அவர்.
சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.
அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.
“நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை” என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.
“இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்” என்று அவர் அங்கலாய்கிறார்.
ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.