உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு நபர்களால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாகி, புகார் அளிக்க சென்ற இளம்பெண்ணை போலீஸ் எஸ்.ஐ படுக்கைக்கு அழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் திகதி இரவு இரண்டு நபர்களால் 37 வயதான இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, துணை காவல் ஆய்வாளர் ஜெய்பால் சிங் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, புகார் அளிக்கச் சென்ற பெண்ணை படுக்கைக்கு அழைத்துள்ளார், இதனால் செய்வதறியாது தவித்த இளம்பெண் காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து காவல் நிலையம் சென்ற அந்த பெண் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் புகார் அளித்தார். அப்போது, காவல் அதிகாரி பேசுவதை ரகசியமாக பதிவு செய்த ஷில்பா அது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், எஸ்.ஐ. ஜெய்பால் சிங்கின் குரல் பதிவு செய்யப்பட்ட குரலுடன் ஒத்துப் போகவில்லை என தட்டிக்கழித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ. ஜெய்பால் சிங் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணியவாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.